புதுடெல்லி: டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அப்தாப் அமீன் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்தாப் வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றி வருகிறார். குறிப்பாக ஷிரத்தாவின் உடல் பாகங்களை எங்கெல்லாம் வீசினார் என்பது குறித்த தகவல்களை கூற மறுக்கிறார். தலை உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனை மும்பையில் வீசியதாக அப்தாப் கூறியுள்ளார். அந்த செல்போனும் இதுவரை கிடைக்கவில்லை.
எனவே அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ அனாலிசிஸ்) நடத்த டெல்லி போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.
உண்மை கண்டறியும் சோதனையின்போது உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அப்தாப் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாரா என்பதை கண்டறிய அவருக்கு நேற்று பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. அவருக்கு இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.