இதன்பின்னர், இந்நிறுவனங்கள் அபரீதமாக வளர்ச்சி அடைவதை நாங்கள் கண்காணித்து வந்தோம். இதற்கிடையே, இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகாரும் வந்தது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி, 21 வகையான பொருள்கள் அடங்கிய ‘பொங்கல் பரிசுத் தொகுப்பை’ வழங்கியதில் அருணாச்சலா இம்பெக்ஸ், இன்டகிரேட்டடு சர்வீஸ் பாயின்ட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. இந்தத் தொகுப்பில், சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தரமற்ற பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அடுக்கடுக்கானப் புகார்கள் எழுந்தும், நிறுவனங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது.
இதன் பின்னால் சில அரசியல் முகங்கள் இருக்கலாமென்று நாங்கள் சந்தேகித்தோம். முன்னதாக, கொரோனா நிவாரண பொருள்கள் வழங்கியதிலும் இந்நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறது. இவ்வாறு அரசின் எல்லா திட்டங்களிலும் இந்நிறுவனங்கள் இருப்பதை சேர்த்து பின்னர்தான், சோதனையில் இறங்கினோம். அதன்படி, இந்த கொள்முதலுக்கு பின்னால் இருக்கும் இடைத்தரகர்கள், அதிகாரிகளின் பெயர் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டிருந்த ஒரு டைரி சிக்கியிருக்கிறது. அதில் பருப்பு, பாமாயிலுக்கு கமிஷன் எவ்வளவு என்பது போன்ற கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழ்நாடு வாணிபக் கழகத்தை தொடர்புப்படுத்தும் மூன்று முக்கிய ஆவணங்களும் கிடைத்திருக்கிறது. இதனை முழுமையாக ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர் விரிவாக…