மதுரை திருப்பாலை பகுதியில் தனியார் பள்ளி வாகனத்தில் அளவுக்கு அதிகமானோரை ஏற்றி சென்றதால் 10 மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. 4 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை திருப்பாலை பகுதியில் நல்லமணி யாதவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. அப்பள்ளியை சேர்ந்த 130 மாணவிகளை, நேற்று மாலை ஒரே பள்ளி வாகனத்தில் அழைத்து சென்றபோது, நெரிசலில் சிக்கிய 10 மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 4 மாணவிகள் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியதோடு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாணாக்கர்களின் வாகன பாதுகாப்பு கருதி், அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற பேருந்து பறிமுதல் செய்த அப்பன் திருப்பதி காவல்துறையினர், பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை யசோதா, பள்ளி வாகன ஓட்டுநர் சுசீந்திரன் ஆகியோர் மீது வாகனச்சட்டம் மற்றும் ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM