கரூர்: கரூர் வடக்கு ராமகிருஷ்ணபுரத்தில் தனியார் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஜவுளிகளை ஏற்றுமதி செய்து வந்துள்ளது.
இது தொடர்பான பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை இ-மெயில் மூலமே இரு நிறுவனங்களும் பகிர்ந்து வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி ரூ.25 லட்சம் மதிப்பிலான ஜவுளிகளை கரூரில் இருந்து ஜெர்மனி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு பணம் தருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, 3 மாதங்களுக்குப் பிறகு இந்தத் தொகை தொடர்பாக கரூர் ஏற்றுமதி நிறுவனம் கேட்டபோது, தாங்கள் ஏற்கெனவே தொகையை வழங்கி விட்டதாக ஜெர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விசாரணையில், கரூர் ஏற்றுமதி நிறுவனத்தின் இ-மெயில் ஐ.டியை யாரோ ஹேக் செய்து, ஜெர்மனி நிறுவனத்திடம் பேசி, ரூ.25 லட்சத்தைப் பெற்று, மோசடி செய்த விவரம் தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் சைபர் கிரைம் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.