பெங்களூரு: மங்களூரில் ஆட்டோவில் நிகழ்ந்த ‘குக்கர்’ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, இதுவரை அறியப்படாத, ‘இஸ்லாமிய தற்காப்பு கவுன்சில்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூரின் பம்ப்வெல் பகுதியில், கடந்த 20ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், ஷிவமொகாவின் தீர்த்தஹள்ளியை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஷாரிக், 27, ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம், 60, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் மங்களூரின் பாதர் முல்லா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், இதுவரை அறியப்படாத, ‘இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில்’ என்ற இஸ்லாமிய தற்காப்பு கவுன்சில், 23ம் தேதியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
போலீசார் கைது செய்துள்ள ஷாரிக் எங்கள் சகோதரர். மங்களூரின் கத்ரி கோவில் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருந்தார். எங்கள் திட்டம் நிறைவேறவில்லை என்றாலும், பாதுகாப்பு படையினர் கண்களில் மண்ணை துாவி மீண்டும் தாக்குதல் நடத்துவோம்.
எங்கள் சகோதரர் ஷாரிக் கைதால் கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார் அடைந்திருக்கும் மகிழ்ச்சி குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும். உங்களின் அடக்குமுறையை விரைவில் உங்களுக்கே திருப்பி தருவோம். எங்கள் மத விவகாரங்களில் தலையிடுவதற்காக புதுப்புது சட்டங்கள் அமல் செய்யப்படுகின்றன.
இதனால், எங்கள் மதத்தின் அப்பாவிகள் சிறையில் சிதைக்கப்படுகின்றனர். இதற்கு தக்க பதிலடி தர நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்பு
கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மங்களூரில் நேற்று கூறுகையில், ”மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு சிபாரிசு செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் சேகரிக்கப்பட்ட தடயங்கள், தகவல்கள் அனைத்தும் கங்கனாடி போலீஸ் நிலையத்தில் இருந்து, என்.ஐ.ஏ.,விடம் வழங்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement