புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டி தப்பி வந்தவரை டில்லி போலீசார் கைது செய்தனர். அவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.8 கோடி பரிசு அளிக்கப்படும் என ஆஸ்திரேலியா போலீசார் அறிவித்திருந்தனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் இளம் பெண், டோயா கார்டிங்லி28. கடந்த 2018ல், இவர் இங்குள்ள பீச்சில் நடைப்பயிற்சி சென்றபோது, மர்ம நபர் ஒருவர், இவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். போலீஸ் விசாரணையில் இந்த கொலையைச் செய்தவர், ரஜ்வீந்தர் சிங் என்ற இந்தியர் என்பதும், இவர் இங்குள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
கொலை செய்ததும், தன் மனைவி, மூன்று குழந்தைகளை ஆஸ்திரேலியாவிலேயே விட்டு விட்டு, இந்தியாவுக்கு தப்பி ஓடி விட்டார்.ரஜ்வீந்தரை பிடிக்க இந்திய போலீசாரின் உதவி கோரப்பட்டது. தொடர்ந்து முயற்சி மேற்கொண்டும் அவரை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, ‘ரஜ்வீந்தரைப் பற்றி தகவல் தெரிவித்தாலோ, அவரை பிடித்துக் கொடுத்தாலோ, 8 கோடி ரூபாய் பரிசாக தரப்படும்’ என, குயின்ஸ்லாந்து போலீசார் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில், இந்தியாவிற்கு தப்பி வந்த ரஜ்வீந்தரை(38) டில்லி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டில்லி போலீசார் கூறுகையில், ரஜ்வீந்தருக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். சிபிஐ.,யும் இண்டர்போலும் இணைந்து செயல்படுகிறது.
நாடு கடத்துதல் தொடர்பான சட்டத்தில் கடந்த நவ.,21 அன்று ரஜ்விந்தருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. சிபிஐ மற்றும் விசாரைண அமைப்புகளிடம் இருந்து போலீசுக்கு தகவல் வந்தது. இன்று(நவ.,25) காலை 6 மணியளவில் சிபிஐ, இண்டர்போல் மற்றும் ஆஸ்., போலீசார், உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் வடக்கு டில்லியின் ஜிடி கர்னல் சாலையில் கைது செய்யப்பட்டார். சட்ட நடைமுறைகளின்படி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
கொலை செய்துவிட்டு தப்பி வந்த பிறகு, ரஜ்விந்தர் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை. அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஆஸ்திரேலியாவில் தான் வசிக்கின்றனர். கொலை செய்துவிட்டு இந்தியா தப்பி வந்த ரஜ்விந்தர், வடக்கு டில்லியில் பதுங்கியதுடன், போலீசிடம் இருந்து தப்பிக்க தனது அடையாளத்தை மாற்றி கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
ரஜ்விந்தர் கைது குறித்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து போலீசார் உறுதி செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்