சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை பகிர முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் பதில் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விமான நிலைய திட்டம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “பரந்தூர் விமான நிலையத்தின் வருகையால் கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பிற விமான நிலையங்களும் வளர்ச்சி அடையும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை பகிர முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் பதில் அளித்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட தகவல் என்கிற காரணத்தைக் கூறி சாத்தியக் கூறு அறிக்கையை பகிர முடியாது என்று தெரிவித்துள்ளது.