இது குறித்து கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்திருக்கும் புகாரில் கூறியிருப்பதாவது, “நான் என்னுடைய கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்துவந்தேன். அப்போது ராஜூவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்தேன். என்னுடைய குழந்தைகளை கவனித்துக்கொள்வதாக ராஜூ தெரிவித்ததால்தான், நான் அவர்களை என்னுடன் அழைத்து வந்திருந்தேன். என்னுடைய 18 வயது மகளைச் சமீபகாலமாக ராஜூ தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார். இரவில்கூட தகாத முறையில் நடந்துகொண்டார். சம்பவத்தன்று நான் வேலைக்குப் புறப்பட்டேன். நான் வெளியில் செல்லும்போது, `போனை ஏன் எடுத்துச் செல்கிறாய்… வீட்டில் வைத்துவிட்டுப் போ’ என்று கூறி ராஜூ கேட்டுக்கொண்டார். நானும் போனை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றேன். வீட்டில் மகள்கள் இருந்தனர்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே என்னிடமிருந்த சாவி மூலம் கதவைத் திறந்தபோது என்னுடைய 18 வயது மகள் மயங்கிக்கிடந்தாள். அவளது கழுத்தில் காயம் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தபோது ராஜூ அவசரமாகக் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். உடனே என் மகளை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றோம். ஆனால் அவள் ஏற்கெனவே இறந்துவிட்டாள் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்” என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து பூந்தமல்லி காவல் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் கூறுகையில், “பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வில், இளம்பெண்ணைக் கொலை செய்த பிறகு பிணத்துடன் ராஜூ உறவுவைத்திருந்தது தெரியவந்திருக்கிறது. எனவே, கொலை வழக்குடன் பாலியல் வன்கொடுமை வழக்கும் சேர்த்து பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கொலைக்குப் பிறகு ராஜூ தொடர்ந்து தலைமறைவாக இருந்தான்.
ராஜூ தப்பிச்செல்லும்போது இரண்டு மொபைல் போன்களையும் திருடிச் சென்ரிருந்தான். அந்த போன்கள் தொடர்ந்து ஆஃப் செய்யப்பட்டிருந்தன. சமீபத்தில் அதில் ஒரு போன் ஆன் செய்யப்பட்டது. உடனே அவன் இருக்கும் இடம் தெரியவந்தது. மும்பை வீராரில் அவன் இருப்பதைக் கண்டுபிடித்தோம். தனிப்படை போலீஸார் சென்னையிலிருந்து சென்று மும்பை போலீஸாரின் துணையோடு ராஜூவைக் கைதுசெய்திருக்கிறோம். வீராரில் ராஜூவின் மனைவி வசிக்கிறார். அவரைத்தான் ராஜூ தேடிவந்திருந்தான்” என்றார்.