சென்னை: போலி டெலிபோன் நிறுவனம் நடத்தி வெளிநாட்டு போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் போலியான டெலிபோன் நிறுவனம் நடத்தி, வெளிநாட்டு போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பெரிய அளவில்மோசடி நடப்பதாக மத்திய உளவுப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக வந்த புகாரையடுத்து அமைந்தகரையில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், அங்கு போலி டெலிபோன் நிறுவனம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
சிம்பாக்ஸ் என்ற கருவியை பயன்படுத்தி, வெளிநாட்டு போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பேச வைத்ததும் தெரியவந்தது.
இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (19), வேலூர் மாவட்டம் குணவட்டம் பகுதியைச் சேர்ந்த சல்மான் செரீப் (29)ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.