சீனாவில் ஐபோன்களை தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய பாக்ஸ்கான் ஆலையில் நேற்று திடீரென வன்முறை மூண்டது. ஐபோன் ஆலை பணியாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஊதியம் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது தொடர்பாக செங்சோவ் ஆலை பணியாளர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க பணியாளர்களுடனும், அரசுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்கள் எவரையும் நிறுவனம் தேர்வு செய்யவில்லை. இவ்வாறு பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.
2 லட்சம் பணியாளர்கள்: ஐபோன் நகரம் என்று அழைக்கப்படும் செங்சோவ் பாக்ஸ்கான் ஆலையில் சுமார் 2 லட்சம் பணியாளர்கள் பணிபுரியும் அளவுக்கு மிகப்பெரிய வசதி யினைக் கொண்டது. இந்த ஆலையில், கரோனா தொற்று அதிகரித்ததையடுத்து அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி ஏராளமான பணியாளர்கள் தடுப்புசுவரை தாண்டி குதித்து சொந்தஊர்களுக்கு நடந்து சென்ற வீடியோ அண்மையில் வைரலானது குறிப்பிடத்தக்கது.