ஜெய்ப்பூர் :ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு, ராஜஸ்தானைச் சேர்ந்த குர்ஜார் சமூக அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ”ராகுலின் யாத்திரை வெற்றி பெறும்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அந்த கட்சியின் எம்.பி.,யுமான ராகுல், நாடு தழுவிய அளவில் ஒற்றுமை யாத்திரை என்ற நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.ராஜஸ்தானில் செல்வாக்கான குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் விஜய்சிங் பைன்ஸ்லா சமீபத்தில் கூறியதாவது:ராஜஸ்தானில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சச்சின் பைலட் தான் முதல்வராகியிருக்க வேண்டும்.
ஆனால், அசோக் கெலாட் முதல்வராக்கப்பட்டார். இது, குர்ஜார் சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட துரோகம். தற்போது கூட சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர கெலாட் மறுக்கிறார்.
இதை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி தராவிட்டால், ராகுலின் ஒற்றுமை யாத்திரையை ராஜஸ்தானுக்குள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
சச்சின் பைலட் நேற்று கூறியதாவது:
ராகுலின் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பை பொறுக்க முடியாமல், அதை முறியடிக்க பா.ஜ.,வினர் பல்வேறு வகையிலும் முயற்சிக்கின்றனர். அதற்காக பலரை துாண்டி விடுகின்றனர். என்ன முயற்சித்தாலும் ராஜஸ்தானில் ராகுலின் யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைக்கும். யாத்திரை வெற்றி பெறுவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement