Loading

பண மோசடிப் புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் சூரி மீண்டும் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக திரைப்பட நகைச்சுவை நடிகரான சூரி கடந்த மார்ச் மாதம் அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதகாலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டது.

இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடிகர் சூரி மூன்று முறைக்கும் மேல் இவ்வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளித்துள்ள நிலையில், இன்றும் நடிகர் சூரி மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற விசாரணைக்குப் பின் வெளியே வந்த சூரி செய்தியாளர்களை சந்தித்தார்.

image

அப்போது பேசிய அவர், “முதல் முறை வந்தேன் விசாரணை நடந்தது, மீண்டும் வந்தேன் விசாரணை நடந்தது, மீண்டும் வந்தேன் விசாரணை நடந்தது, இன்றும் வந்தேன் விசாரணை நடந்தது” என தனது விரக்தியான மனநிலையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், “முன்பெல்லாம் வீட்டைவிட்டு வெளியே சென்று வந்தால் ஷூட்டிங் சென்று வருகிறீர்களா எனக் கேட்பவர்கள், இப்போதெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் சென்று வருகிறீர்களா எனக் கேட்கிறார்கள்” என தெரிவித்தார்.

மேலும், விசாரணை திருப்திகராமக உள்ளது என தான் நம்புவதாகவும், தனக்கு சாதகமாக முடியவேண்டும் எனக் கருதவில்லை எனவும் கூறிய அவர், நியாயம் எதுவோ அது கிடைக்க வேண்டும் என மட்டுமே தான் நினைப்பதாகவும் கூறினார். மேலும், எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தினார்களா என்பது பற்றி தனக்கு தெரியவில்லை என்ற அவர், தனக்கு காவல்துறை மீதும், நீதிமன்றம் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை உள்ளது எனவும், தனக்கான நியாயம் கிடைக்கும் என நினைப்பதாகவும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *