மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட சீா்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் ரூ. 1,000 நிவாரணம் வழங்கும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன் உள்ளிட்டோர் மணி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில், மழை நிவாரணம் வழங்கும் பணியை தொடங்கிவைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நவ.14-ஆம் தேதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சீா்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை குடும்பத்துக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, சீா்காழி வட்டத்தில் உள்ள 145 நியாய விலைக் கடைகளில் 99,518 குடும்ப அட்டைதாரா்களுக்கும், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 94 நியாய விலைக்கடைகளில் 62,129 குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 நிவாரண உதவித்தொகை வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது.
இந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் அந்தந்த நியாய விலைக் கடைகளில் நேரடியாகச் சென்று மழை நிவாரணத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.