புதுச்சேரி-துாய்மை பள்ளிக்கான மத்திய அரசின் விருது பெற்ற 6 பள்ளிகளின் மாணவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் அகில இந்திய அளவில் ‘சுவச் வித்யாலயா புரஸ்கர்’ என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதில் ஆண்டுதோறும் துாய்மைக்கான சிறந்த பள்ளிகள் தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் 2011-2022 க்கான விருதிற்கு 732 பள்ளிகள் இந்திட்டத்திற்கு பதிவு செய்திருந்தன. அதில் 713 பள்ளிகள் போட்டியில் பங்கேற்றன.
அதில் மாநில அளவில் விருது பெற்ற 20 பள்ளிகளில் , தேசிய அளவிலான விருதிற்கு 19 பள்ளிகள் விண்ணப்பித்தன. அதில், நாடு முழுவதும் 39 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு அறிவித்தது.
இதில் புதுச்சேரி மாநிலத்தில், காரைக்கால் மாவட்டத்தில் கண்ணப்பூர், பூவம் மற்றும் பிள்ளைத்தெருவாசல் அரசு தொடக்கப் பள்ளிகளும், புதுச்சேரியில் குமாரப்பாளையம் மற்றும் திருக்கனுார் அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் கொம்பாக்கம் அமலோற்பவம் லுார்து அகாடமி பள்ளி ஆகிய 6 பள்ளிகள் விருது பெற்றன.
இதில் தேசிய அளவில் விருது பெற்ற பள்ளிகள் பட்டியலில் புதுச்சேரி அரசு பள்ளிகள் 6 விருதுகள் பெற்று 2வது மாநிலமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கத்து.
விருது பெற்ற 6 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பள்ளி சார்பில் தேர்வு செய்யப்பட்ட 6 மாணவர்கள் நேற்று முன்தினம் சட்டசபையில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கலெக்டர் வல்லவன், அமலோற்பவம் பள்ளி தாளாளர் பிரிட்டோ , கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசு துவக்கபள்ளி பொறுப்பாசிரியர் சசிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement