1948-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இலங்கை விடுதலை அடைந்தது. அப்போது ஒலிக்கத் தொடங்கியது சிறுபான்மை தமிழர்களுக்கான சுயாட்சி உரிமைக் குரல். ஆனால் அது வழங்கப்படாமலேயே இருந்தது. 1970-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த உரிமைப் போராட்டம் ஆயுதம் ஏந்தும் போராகவே மாறியது. பின்பு 1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கைக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் 13- வது திருத்தச் சட்டப்படி சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும். ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் இதை முற்றிலும் நீக்கக் கடந்த ஆண்டு இலங்கை அரசு முயற்சித்தது. அதற்கு தமிழீழ போராளிகள், சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தத் திருத்தச் சட்டம் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், அதில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் தமிழர்களுக்கு எதிரான சூழலை உருவாக்கியதாக சில ஈழத் தலைவர்கள் கூறுவதும் உண்டு.
இலங்கையில் 15% மக்கள் தொகைக் கொண்ட தமிழர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்குவது மிக முக்கியம். குறிப்பாக, தமிழர்கள்-சிங்களவர்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும். அதற்குத் தீர்வுக் காண அனைத்துக் கட்சிக் கூட்டம் வழிவகுக்கும் என்பதே அனைவரது நம்பிக்கை.!