புதுச்சேரி-புதுச்சேரியில் திருமண ஆசைவார்த்தை கூறி முதியவரை ஏமாற்றி, ரூ.12 லட்சம் மோசடி செய்த தமிழக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, மோந்தர்சியே வீதியை சேர்ந்தவர் வேணு,78; மனைவியை இழந்த இவர், வாழ்க்கை துணைக்கு பெண் தேடினார். அதனை அறிந்த, அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ரவிசங்கர்,29; வேணுவிடம், ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி, அவர் மறுமணத்திற்கு வரண் பார்ப்பதாக கூறி, மொபைல் போன் எண்ணை கொடுத்தார்.
அந்த மொபைல் எண்ணில் இருந்து வேணுவிற்கு வாட்ஸ் ஆப்பில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து தகவல் வந்தது. பின்னர் திருமண செலவிற்கு ரூ.12 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறினார். அதன்படி வேணு, ரூ.12 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தினார்.
இந்நிலையில், ரவிசங்கர் வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவானார். அதன் பிறகு வாட்ஸ் ஆப்பில் எந்த தகவலும் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வேணு, இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், ரவிசங்கரே பெண் போன்று வேணுவிற்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் அளித்து ரூ.12 லட்சத்தை பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில், கருவடிக்குப்பத்தில் பதுங்கியிருந்த ரவிசங்கரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ரவிசங்கர் மீது தமிழகத்தில் பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement