மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர் அருண் கோயல். கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசு பணியிலிருந்த இவர், கடந்த 18-ம் தேதி தன்னுடைய பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அருண் கோயில் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே, நாட்டின் தேர்தல் ஆணையராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். இது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
இந்த நிலையில், நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் செய்யக் கோரிய மனுக்களை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போது அருண் கோயல் நியமன விவகாரமும் விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு வழக்கறிஞர்களான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் நட்ராஜ் ஆகியோர், “அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை” என்றனர்.