சென்னை: "நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக வரம்புகளை மீறி தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவையும் ஆளுநர் எடுக்க முடியாது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுவதைத் தொடர்ந்து செய்து வருகிறார்