வேலூரில் இன்று, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘ஒன்றரை ஆண்டுக்காலமாக இந்த திராவிட மாடல் ஆட்சி மிகச்சிறப்பாகவும், பொதுமக்கள் பாராட்டுகின்ற வகையிலும் நடந்துகொண்டிருக்கிறது. அதனை பொருத்துக்கொள்ள முடியாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பழைய பல்லவி பாடுகிறார். நேற்றைய தினம் அவர் ஒரு கருத்தையும் வெளியிட்டிருந்தார். அதாவது, கரூர் டிவிஷனில் வேலை முழுமைப் பெறாமலேயே ‘பில்’ போடப்பட்டிருக்கிறது என்பதுதான் அவரின் குற்றச்சாட்டு. கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதியன்றே இது தொடர்பான செய்தி இணையதளம் ஒன்றில் வந்திருந்தது. நானும் அதைப் பார்த்தேன். உடனடியாக விசாரணை நடத்த மேற்பார்வைப் பொறியாளருக்கு உத்தரவிட்டேன். அவரும் சம்பந்தப்பட்ட பகுதியை பார்த்துவிட்டு, ‘ஏறத்தாழ 95 சதவிகித பணிகள்தான் நடந்திருக்கின்றன. இன்னும் பணிகள் முடியவில்லை’ என்று என்னிடம் சொன்னார். உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரியை நான் தற்காலிக பணிநீக்கம் செய்துவிட்டேன்.
அதன்பிறகு, மூன்று நான்கு தினங்களிலேயே விடுபட்டிருந்த பணியை அதன் ஒப்பந்ததாரர் முடித்துவிட்டார். அந்த ஒப்பந்ததாரரிடமும் ‘உங்களை ஏன் பிளாக் லிஸ்ட்டில் வைக்கக்கூடாது’ என்று கேட்டு நோட்டீஸ் கொடுத்தேன். ‘பில் போடுவதற்கு முன்பு ‘எம்’ (Measurement Book) புக்கில் ஒப்பந்ததாரர் கையெழுத்திட வேண்டும். ஆனால், தனது கையெழுத்தே இல்லாமல் பில் போடப்பட்டு எனது அக்கௌண்ட்டுக்கு பணம் அனுப்பினால், நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?’ என்று அந்த ஒப்பந்ததாரர் பதில் கொடுத்தார்.
‘எம்’ புக்கில் அவர் கையெழுத்துப் போடவில்லை. அதிகாரிகள் செய்த தவறு என்பதால், சட்ட ஆலோசனை நடத்தியப் பின்னர் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனாலும், தலைமை பொறியாளர் கோதண்டம் என்பவரை விசாரணை அதிகாரியாக போட்டிருக்கிறேன். இந்த விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள்மீது துறைரீதியாக கண்டிப்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துகொண்டிருக்கிறோம். அது தொடர்பாக தொடர்ந்து கடிதங்களையும் ஒன்றிய அரசுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம்’’ என்றார்.