நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அது உண்மை இல்லை என அவரது செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை சமந்தா, கடந்த மாத இறுதியில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு டப்பிங் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர், “சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் ( தன்னெதிர்ப்பு நோய்கள்) இருப்பது கண்டறியப்பட்டது. முழுவதும் குணமடைந்தப் பிறகு இதை உங்களிடம் பகிரலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது காலம் எடுக்கும்போல் தெரிகிறது. நாம் எப்பொழுதும் வலுவான விஷயங்களை மட்டுமே முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் இப்போது மெல்ல மெல்ல உணர்கிறேன். இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்ள, நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன்.
விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் உண்டு; உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் இன்னும் ஒரு நாளைக்கூட என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும்போது கூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது. இதனால் நான் குணமடைய இன்னும் ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்றுதான் அர்த்தம் கொள்கிறேன். உங்களை நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
இதன்பின் அவரது யசோதா படம் வெளியானது. பட வெளியீட்டின்போது, “என் மீது நீங்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. உடல்நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள்” என்று பேட்டியளித்திருந்தார்.
தொடர்புடைய செய்தி: ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படம் – இதுதான் காரணம் என உருக்கம்!
இந்நிலையில், தற்போது அவரை மீண்டும் மருத்துவமனையில் அட்மிஷன் போட்டு சிகிச்சையெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், அதனால் சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இன்று காலை தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல்கள்யாவும் வதந்தியே என்றும், தற்போது சமந்தா ஐதராபாத்திலுள்ள அவர் வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் அவரது தொடர்பாளர் ஆங்கில ஊடகாமன இந்தியா டுடே தளத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM