உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூகவலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. அரசுகள் தொடங்கி அதிகாரிகள் வரை அதிகாரப்பூர்வ தகவல்களை ட்விட்டரில் வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கணக்கு ஜூலை மாதத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கத்தினை, மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று ட்விட்டர் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதற்காக பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் நிறுத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. ஒருநாட்டின் சட்ட விதிகளுக்கு மாறாக இருந்தால், உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் இதுபோன்று கணக்குகளை நிறுத்திவைக்கும் நடைமுறையை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை பரப்பும் 100க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள், 4 பேஸ்புக் பக்கங்கள், 5 ட்விட்டர் கணக்குகள் மற்றும் 3 இன்ஸ்டாகிராம் கணக்குகளை மத்திய அரசு இதுவரை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.