காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9 ஆயிரத்து 62 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று மாலை 12 ஆயிரத்து 144 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று முதல் 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 118.69 அடியாகவும், நீர் இருப்பு 91.39 டிஎம்சி-யாகவும் உள்ளது.
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் சுற்று வட்டாரம், காவிரி பாயும் வனப்பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் காவிரியில் நீர்வரத்து அதிரித்துள்ளது.