கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது நன்னியூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள துவரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், நன்னியூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். அ.தி.மு.க சார்பில் தேர்தலில் நின்று ஊராட்சி மன்றத் தலைவரான இவர், கடந்த, 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், அ.தி.மு.க-விலிருந்து விலகி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். இந்த நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய தனியார் தொண்டு நிறுவன அமைப்பு ஒன்று, தமிழ்நாடு முழுவதும் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சாதிய வன்கொடுமைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அதனடிப்படையில், இந்த ஊராட்சி நிர்வாகத்தில் மாற்றுச் சமூகத்தின் தலையீடு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து உண்மை கண்டறியும் ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அடிப்படையில் தமிழ்நாடு அரவுக்கு உண்மை கண்டறியும் குழு, தனது அறிக்கையை அனுப்பி வைத்திருந்தது. அதனடிப்படையில், கடந்த செப்டம்பர் 22-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் நன்னியூர் ஊராட்சியில் திடீர் விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஊராட்சி மன்றத் தலைவர் சுதா, ஊராட்சி செயலாளர் ஆகியோர் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர்.