தற்போது அமேசான் நிறுவனத்தின் ஸ்மார்ட்ஸ்பீக்கரான அலெக்சாவை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். விரும்பிய பாடலை பிளே செய்யவும், விரும்பிய கதை கேட்கவும் இந்தக் கருவி பயன்படுகிறது. சொன்னதைச் செய்யும் சிறிய ரக ரோபோ போல் செயல்பட்டு வரும் அலெக்ஸா மூலம் அமெரிக்காவில் ஒரு குடும்பமே உயிர் தப்பியுள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் வசிக்கும் 6 பேர் கொண்ட குடும்பத்தினர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று அலெக்சா கருவி எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது.
என்னவென்று அவர்கள் விழித்துப் பார்த்தபோது அவர்கள் வீட்டில் உள்ள கேரேஜில் நெருப்பு பற்றிப் புகை வந்துள்ளது. அலெக்சா கொடுத்த எச்சரிக்கை ஒலியால் இவர்கள் நெருப்பை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே அணைத்து, பெரும் தீவிபத்தைத் தவிர்த்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த அரசு செய்தி தொடர்பாளரான பீட் பிரிஞ்சர் இது தொடர்பாகப் பேசுகையில், “அலெக்சா அந்த எச்சரிக்கை ஒலியை எழுப்பாமல் இருந்தால், தூக்கத்தில் தீ பரவி விபத்து ஏற்பட்டிருந்தால் ஆறு பேரின் உயிரும் பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கும்” என்று கூறியிருக்கிறார்.