பூந்தமல்லி: சென்னை மதுரவாயல் பகுதியில் வீடுகள், கடைகளின் பூட்டை உடைத்து அடிக்கடி திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மதுரவாயல் பகுதியில் கூடுதலாக போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று அதிகாலை மதுரவாயல் போலீசார் ரோந்து பனியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியில் 7வது தெருவில் உள்ள ஒரு செல்போன் சர்வீஸ் செய்யும் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சிலர் செல்போன்களை திருடிக்கொண்டு வெளியே வந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள். அவர்களை விரட்டி சென்றதில் ஒருவனை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து பிடிபட்ட அந்த நபரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் ராயபேட்டையை சேர்ந்த சித்தார்த்(19), என்பதும், இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்தார்த்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 செல்போன்கள், ரூ.2 ஆயிரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய அவரது 3 நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.