இந்தியா முழுவதும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனையை நேற்று நள்ளிரவு முதல் என்.ஐ.ஏ மேற்கொண்டுவருகிறது. இந்தச் சோதனைகளில், அமலாக்கத் துறையினரும், உள்ளூர் போலீஸாரும் கூடுதலாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் உட்பட 13 மாநிலங்களில் நடைபெற்றுவரும் இந்தச் சோதனைகள், நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பயங்கரவாத நடவடிக்கைகள், பயிற்சி முகாம்களை நடத்துதல், தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் மக்களைச் சேர்ப்பதற்கு முயற்சிகள் செய்தல் போன்ற குற்றசாட்டுகள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது சொல்லப்படுகின்றன. இதைத் தொடர்ந்தே, என்.ஐ.ஏ சோதனை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.