அமெரிக்காவில் நடைபெற்ற `மோடி@20: டிரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற புத்தக வெளியீடு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய நாடாளுமன்றம், அமைச்சரவை, அரசியலில் உள்ளவர்கள் மற்றும் கிரிக்கெட் அணியைப் பார்க்கும்போது, இவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இடத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 10 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இடத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
நீங்கள் என்னை உள்ளடக்கிய இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கேட்டால் நான் இந்திய அரசியலையும், இந்திய கிரிக்கெட் அணியையும் உதாரணமாகக் கூறுவேன். ஏனென்றால், இந்த இரண்டிலும் ஜனநாயகம் உண்மையில் வேலை செய்கிறது, அதே போல ஆழமடைந்திருக்கிறது என்பேன். மேலும் இந்த மாற்றத்தின் விளைபொருளே பிரதமர் மோடிதான்.
அவரைப் போன்ற ஒருவர் இறுதியில் இந்தியாவின் பிரதமராக வந்திருப்பது, நாடு எந்தளவுக்கு மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் வாக்களிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் வாக்களிக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது” என்றார்.