எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசன் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய அறிவிப்பை பகிர்ந்துள்ளார். அது ஐபிஎல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன அறிவிப்பு அது.
கடந்த 2008 முதல் இந்தியாவில் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஃப்ரான்சைஸ் முறையில் நடத்தப்படும் தொடர் இது. இப்போது மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதன் தொலைகாட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு கவனம் பெற்றிருந்தது.
கரோனா தொற்று காரணமாக கடந்த 2020 சீசன் முழுவதும் அமீரகத்தில் நடைபெற்றது. 2021 சீசன் இந்தியா மற்றும் அமீரகத்தில் நடந்தது. 2022 சீசனுக்கான போட்டிகள் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2023 சீசன் குறித்து கங்குலி சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
“அடுத்த ஐபிஎல் சீசன் ஹோம் மற்றும் அவே என்ற ஃபார்மெட்டில் வழக்கம் போல நடத்தப்படும். பத்து அணிகளும் அந்த அணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஹோம் போட்டிகள் விளையாடும். அதே போல அடுத்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் தொடரும் தொடங்கப்படும்” என கங்குலி தெரிவித்துள்ளார்.
அவர் சொன்னபடி பார்த்தால் சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் வரும் சீசனுக்கு ‘தல’ தோனியின் தரிசனம் உறுதியாக கிடைக்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் செம மகிழ்ச்சியாக உள்ளனர்.