அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் நடந்த கூட்டத்தில் நான் பேசுகையில், ‘ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, அ.தி.மு.க., இயக்கம் செயல்பட்டு வருகிறது. அனைத்து இனத்தை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது’ என்றேன். ஆனால், அங்கு சொல்லாத கருத்துகளை சொன்னதாக செய்திகள் வந்துள்ளன.

எது எப்படியோ… அ.தி.மு.க.,வில் நானும் இருக்கேன் என்பதை, இந்த பேச்சு மூலம் நிரூபிச்சிட்டீங்க!

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை:

ஹிந்து மதம் குறித்து ஆயிரம் விமர்சனங்களை, ஆ.ராஜா, வீரமணி போன்றவர்கள் முன் வைத்தாலும், ஈ.வெ.ரா., கொள்கைகளை ஓரமாக வைத்து விட்டு, முன்னோருக்கு திதி கொடுத்தல், புனித நீராடுதல், இறை வழிபாடு என, ஹிந்து மத நம்பிக்கைகளை மதித்து, துர்கா, சபரீசன் வழியில், சனாதனம் பாதுகாக்கும் திராவிட மாடல் ஆட்சியின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷுக்கு, ஹிந்து தமிழர் கட்சி சார்பில் வாழ்த்துகள்.

அடேங்கப்பா… மகேஷுக்கு, அவரது கட்சியினர் கூட இந்த அளவுக்கு வரவேற்புரை வாசிச்சிருக்க மாட்டாங்க, போங்க!


அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:

தமிழகம் முழுதும் சிறுவர் – சிறுமி இடையே பரவி வரும், ‘இன்புளுயன்சா’ காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். பாதிப்பு பெரிதாக இல்லை எனக்கூறி, அலட்சியமாக இருந்து விடக்கூடாது. மாவட்டந்தோறும் இதற்கான சிறப்பு குழுக்களை அமைத்து, கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில், மாநில அரசு இன்னும் கவனமாக இருக்கணும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!

சிவகங்கை காங்., – எம்.பி., கார்த்தி பேச்சு:

ஒரு அரசியல்வாதி என்ற முறையில் நியாயமான கருத்தை தெரிவித்தால், அக்கருத்தை எதிர்க்கும் கட்சிகளுக்கு எதிரியாகி விடுகிறோம். எந்தவொரு நல்ல விஷயத்திற்காகவும், மனநிலையை மாற்றிக் கொள்வதில் எந்த வித தவறும் இல்லை. ஒரே கொள்கை, பிடிவாதம் என்றிருக்காமல், அவ்வப்போது மனநிலையை மாற்றிக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் தான் புத்திசாலி, சிந்தனையாளராக வரமுடியும்.

latest tamil news

‘தி.மு.க.,வுடன் வேற வழியில்லாம தான் கூட்டணி சேர்ந்திருக்கிறோம்’ என்பதை, நாசூக்கா சுட்டிக்காட்டி இருக்கீங்க என்பது தெளிவாகவே தெரியுது!


பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

நடப்பு, 2022 – -23ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழகத்திற்கு வந்த நேரடி அன்னிய முதலீடு, 5,836 கோடி. இது, கடந்த ஆண்டை விட, 196 கோடி ரூபாய் அதிகம் என்றாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு போதுமானதல்ல. இதே கால கட்டத்தில், மஹாராஷ்டிரா, 40 ஆயிரத்து, 386 கோடி; குஜராத், 24 ஆயிரத்து, 692 கோடி; கர்நாடகா, 21 ஆயிரத்து, 480 கோடி; டில்லி, 17 ஆயிரத்து, 988 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், தமிழகம் ஐந்தாவது இடத்தையே பிடித்துள்ளது.

முதல்வர் துபாய்க்கு எல்லாம் போயிட்டு வந்தும், இவ்வளவு தான் கிடைச்சுதா?


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *