பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமைவரை சுமார் 11 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், இரவு முழுவதும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். பல்வேறு நாடுகளின் தலைவர்களும் லண்டனில் முகாமிட்டு ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அரச பாரம்பர்ய முறைப்படி, சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் யாருமின்றி ராணி எலிசபெத் உடல், மறைந்த அவர் கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்களில் பலர் உணர்ச்சிவசப்பட்டனர். இத்தகைய உணர்ச்சிகரமான சூழ்நிலைக்கு மத்தியில், 52 வயதான மார்க் ஹேக் என்பவர், அங்கு வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி குழுவினரிடம், “ராணி இறக்கவில்லை… அதனால் அவரை சவப்பெட்டியிலிருந்து வெளியேறும்படி கூறப்போகிறேன்” எனக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக போலீஸாரிடம் இது குறித்து தெரிவித்திருக்கின்றனர்.
போலீஸாரும் விரைந்து வந்த அந்த நபரைக் கைதுசெய்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதற்கு முன்பு ராணியின் சவப்பெட்டி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட சலசலப்பின்போது கைதுசெய்யப்பட்ட இருவரில் மார்க் ஹேக்-ம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரைக் கைதுசெய்த போலீஸார், ஒழுங்கற்ற நடத்தைக்காக £120 (ரூ.10,888) அபராதம் விதித்திருக்கின்றனர்.