கேப்டன்தான் ராஜா என்றால் மற்ற வீரர்கள் அனைவரும் தளபதிகள். அப்படி சனகாவிற்கு ஹசரங்கா, ராஜபக்சா, நிசங்கா, மெண்டிஸ், தீக்ஷனா என திறமை வாய்ந்த தளபதிகள் உடனிருந்தனர். ஹசரங்கா, ராஜபக்சா போன்றோர் ஐபிஎல் தொடரில் பெற்ற அனுபவத்தின் மூலம் அணிக்குப் பெரிதும் உதவினர்.
ராஜபக்சா ஓய்வு முடிவை அறிவித்து பின்னர் அதனைத் திரும்ப பெற்று மீண்டும் அணியில் இடம் பிடித்தார். கடைசிவரை தன் அதிரடி பாணியை மாற்றாததுதான் ராஜபக்சாவின் பேட்டிங்கின் சிறப்பு… அதுதான் அணிக்கும் தற்போது உதவியது.
ஹசரங்கா பௌலிங்கில் ஜொலித்தாலும் பேட்டிங்கில் பெரிதாக எதுவும் இந்தத் தொடரில் செய்யவில்லை என்ற குறையை இறுதிப்போட்டியில் போக்கினார்.
இதற்கும் இரண்டாம் இன்னிங்ஸில் முதல் பந்தை வீசாமலேயே 10 ரன்களை விட்டுக் கொடுத்தது இலங்கை. அப்படியிருந்தும் கடைசி வரை போராடி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இலங்கை. ஒரு பைனலில் பீல்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை இறுதிப்போட்டியில் இலங்கை அணி எடுத்துக்காட்டியது.
இலங்கை பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை ஆஸ்திரேலியா உடனான வெற்றியே ஆசுவாசப்படுத்திய நிலையில் ஆசியக் கோப்பையின் வெற்றி கொடுக்கும் மகிழ்ச்சியை விவரித்து எழுத வேண்டியதில்லை.
கடந்த சில வருடங்களில் இலங்கையுடனான போட்டிகள் என்றால் சிறந்த வீரர்களுக்கு ஓய்வளித்து விட்டு சற்று அனுபவம் குறைந்த வீரர்கள், புதுமுகங்கள் என இறக்கிவிட்ட அணிகள் இனி அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நன்கு யோசிக்க வேண்டும் என்பதையும் இந்த ஆசியக் கோப்பை வெற்றி மூலம் உரக்கச் சொல்லியுள்ளனர் இலங்கை அணியினர்!