புதுச்சேரி: மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களில் 30 பேரை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்டு விட்டதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சகோதரர்கள் மியான்மரில் துன்பம் அடைந்து கொண்டிருப்பதை அறிந்து வருந்துகிறேன். அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்.

மத்திய அரசுக்கு கிடைத்த தகவலின்படி 54 பேர் மியான்மரில் இருப்பதாகவும் அவர்களில் 30 பேரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதாகவும் முரளிதரன் தெரிவித்தார்.

அரசுக்கு கிடைத்த தகவலின்படி மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 54 என்றாலும், ஊடகங்கள் மூலமாகவும் மற்ற தகவல்கள் மூலமாகவும் 300க்கும் மேற்பட்டவர்கள் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என்ற செய்தியை அறிந்து, உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு தூதரகம் மூலமாக மேற்கொண்டு வருவதாகவும் முரளிதரன் தெரிவித்தார்.

“நமது நாட்டில் இருந்து சென்றவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். சீனாவின் பேங்காக்கில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பின்னர், அவர்களை சைபர் கிரைமில் பலரின் கணக்குகளை முடக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது சைபர் குற்றத்தின் கீழ் வரும். அதோடு, அவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்களையும் அழைத்துச் சென்றவர்கள் வைத்திருக்கிறார்கள்” என்று முரளிதரன் தெரிவித்தார்.

“அது மட்டுமின்றி, இங்கிருந்து சென்றவர்கள் அனைவரும் மியான்மர் அரசின் வரையறைக்கு உட்பட்ட இடங்களில் இல்லை. ராணுவம் / போராளிகளின் ஆளுமைக்குப்பட்ட இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதில் மியான்மர் அரசும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. அதேநேரத்தில், பாஸ்போர்ட் இல்லாவிட்டாலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. யாராவது தங்களுக்கு தெரிந்தவர்கள் அங்கே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் தெரிவிப்பார்களேயானால், அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் எல்லோரையும் மீட்பதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது” என்று மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *