அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிர்வாக சீரமைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இது, ‘துக்ளக்’ தர்பாரைத் தான் நினைவூட்டுகிறது.
ஒருவேளை, ‘துக்ளக் தர்பார்’ எப்படி இருக்கும்னு இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு, ‘பாடம்’ எடுக்கிறாங்களோ?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். இப்படி மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்க அப்பா அடிக்கடி சொல்ற மாதிரி, ‘கார் உள்ள வரை, கடல் நீர் உள்ள வரை’ இந்த பிரச்னையை தீர்க்க, எந்த நடவடிக்கையும் எடுப்பாங்களா என்பது கேள்விக்குறி தான்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
ஆயுத பூஜை, விஜயதசமியை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு புறப்பட மக்கள் திட்டமிட்டுள்ளனர். ஆம்னி பஸ் கட்டணங்கள், விமான கட்டணத்துக்கு இணையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தீராத பிரச்னைக்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், அரசு பஸ்களை அதிகம் இயக்குவது, ஆம்னி பஸ்களில் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்வது தான், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
இந்த பிரச்னை வருஷா வருஷம் வருது… இதற்கு, தங்கள் ஆட்சியில் நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க என்பதை சுட்டிக்காட்டி, அதன்படியே இப்பவும் தீர்வு கேட்டிருக்கலாமே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தைச் சேர்ந்த, 60 பேர் உட்பட, 300 இந்திய பொறியாளர்களை, மியான்மர் நாட்டுக்கு கடத்தி சென்று, சட்டவிரோத சைபர் குற்றங்களை செய்ய கட்டாயப்படுத்துவதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. தாய்லாந்தில் வேலை வழங்குவதாக அழைத்து செல்லப்பட்ட அவர்கள், அங்கிருந்து மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். மியான்மருக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி, 300 பொறியாளர்களையும் மத்திய அரசு மீட்க வேண்டும்.
நம்ம ஊர்ல பரோட்டா மாஸ்டரை விட, இன்ஜினியர் வேலைக்கு சம்பளம் குறைவாக இருப்பதால் தானே, கடல் கடந்து போனாங்க என்ற நிதர்சனம் நெஞ்சை சுடுது!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேச்சு
: நீலகிரி தொகுதி எம்.பி., – ஆ.ராஜா, தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுத வேண்டும் என, கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார். தி.மு.க.,வை அழிக்க, அந்த கட்சிக்குள்ளேயே, ராஜா தலைமையில் ஒரு குழுவும், செந்தில் பாலாஜி தலைமையில் ஒரு குழுவும் செயல்படுகின்றன.
இந்த ரெண்டு பேருக்கும் தானே, முதல்வர் ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் தருகிறார். அப்படிப்பட்ட நிலையில, நீங்க சொல்றது நம்புற மாதிரியா இருக்குது?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்