Loading

எஸ்.கணேசராஜ் என்கிற அதிகம் அறியப்படாத படைப்பாளி

‘சின்னத்தாயி’ திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.கணேசராஜ். பாரதிராஜா மற்றும் மனோஜ்குமார் ஆகிய இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்று தெரிகிறது. இவரது இயக்கத்தில் ‘சின்னத்தாயி’, ‘மாமியார் வீடு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. நெப்போலியனை நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘பரணி’ என்கிற திரைப்படம், நிதிச்சிக்கலால் வெளியாகவில்லை. எஸ்.கணேசராஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். கரிசல் காடுகள், அக்கினி அத்தியாயங்கள், கவசம் என்கிற மூன்று சிறுகதைத் தொகுதியையும் ‘பொட்டல்’ என்கிற நாவலையும் எழுதியுள்ளார். விருதுகளையும் பெற்றுள்ளார். இவற்றைத் தவிர எஸ்.கணேசராஜ் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவரது புகைப்படம் ஒன்று கூட இணையத்தில் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமானதொன்று. இந்த சொற்பத் தகவல்களைக் கூட தீவிரமான தேடல்களுக்குப் பிறகே அறிய முடிந்தது. ஆவணப்படுத்துதலில் நாம் எத்தனை பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கான அடையாளம் இது.

சின்னத்தாயி

சின்னத்தாயி

கிராமத்தின் கொடை திருவிழா ஏற்பாடுகள், சுடலை மாட சாமியின் உக்கிரம் மற்றும் கனிவு, சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகள், மரபுகள் போன்றவற்றைக் கதையுடன் பின்னிப் பிணைந்து மண்ணின் வாசனையோடு காட்சிகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் கணேசராஜ். அதே சமயத்தில், ஆணாதிக்க உலகில், அவர்கள் இட்டு வைத்திருக்கும் அநியாயமான விதிகளினால் காலம் காலமாகப் பெண்கள் படும் பாட்டையும் உணர்ச்சிகரமாகப் பதிவு செய்திருக்கிறார்.

கிராமத்து மனிதர்கள் என்றாலே வெள்ளந்தியானவர்கள், அப்பாவிகள் என்பது போன்ற சித்திரம் நகரத்தில் படிந்துள்ளது. அதில் கணிசமான அளவு உண்மை இருந்தாலும் அதே கிராமங்களில்தான் சாதியக் கொடுமைகள், வன்முறைகள், வர்க்க வேறுபாடுகள் போன்ற பழமைவாதங்களும் ஆழமாக உறைந்துள்ளன. காம வெறி காரணமாக, ஓர் அபலைப் பெண்ணைக் கொடூரமாகக் கொன்று போடும் ஒரு ரவுடியின் குற்றத்தை, ஊர்க்கட்டுப்பாடு என்கிற பெயரில் மூடி மறைக்கும் அதே கிராமம்தான், பெண்களின் பரிதாபங்களைப் புரிந்து கொள்ள விரும்பாமல் ‘கற்பு’ என்கிற பெயரில் சாட்டையை எடுத்து அவர்களை விளாசுகிறது. இந்த முரணை மிக அழுத்தமான காட்சிகளின் வழியாக உணர்த்தியுள்ளார் கணேசராஜ்.

“ரேஷன் கார்டு, ரோடு வேணுமின்னா மட்டும் கவர்ட்மெண்ட் கிட்ட வர்றீங்க. ஆனா ஒரு கொலையை மட்டும் ஊர்க்கட்டுப்பாடு-ன்ற பெயர்ல மூடி மறைக்கறீங்க?” என்று இன்ஸ்பெக்டர் ராதாரவி கேட்கும் கேள்வியின் மூலம் கிராமத்தில் உள்ள அடித்தட்டு சமூகங்கள் எதிர்கொள்ளும் சாதிய வன்முறைகளின் அவலம் பதிவாகியிருக்கிறது.

சுடலை மாட சாமி காவல்தெய்வமாக ஆவேசத்துடன் ஊர்வலம் வரும் போது எதிரில் எதிர்ப்படுகிறவர்கள் எவராக இருந்தாலும் சாவைச் சந்திப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் மரண பயத்தையும் உதறி விட்டு சாமியை நேருக்கு நேராக எதிர்கொண்டு நீதி கேட்கிறார்கள் ராசம்மாவும் சின்னத்தாயியும். தலைமுறை மாறினாலும் பெண்களின் பிரச்னைகள் அப்படியேதான் இருக்கின்றன. சாமியாக மாறி வலம் வரும் பொன்ராசுவை வழிமறிக்கும் சின்னத்தாயி கேட்கிறாள். “நீங்க சாமியா, மனுசனான்னு எனக்குத் தெரியாது. ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் வாழ வைக்கற எல்லா ஆம்பளையும் தெய்வம்தான்” என்று நீதி வேண்டி உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறாள். தெய்வம் அவளது குரலுக்குச் செவி சாய்த்ததா?

சின்னத்தாயி

சின்னத்தாயி

சண்டைக்காட்சிகள் முதற்கொண்டு ஆண் – உறவுச் சிக்கல்கள் வரை இந்தப் படத்தின் பல காட்டுக்கோர்வைகளை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக உயிர்ப்புடன் சித்திரித்துள்ளார் கணேசராஜ். விஸ்வம் நடராஜின் கேமரா அழகியலுடனும் நுண்ணுணர்வுடனும் இயங்கி காட்சிகளின் சிறப்பைக் கூட்டியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *