சென்னை: உல்லாசத்துக்கு கள்ளக்காதலி வர மறுத்ததால், கள்ளக்காதலன் அந்த பெண்ணின் 7 வயது மகனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் கவிதா. இவரது கணவர் ரசூல். இவர்களுக்கு திருமணமாகி ஸ்டீபன் (9), ஆல்பர்ட் (7) ஆகிய மகன்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கவிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து கணவர் ரசூல் பிரிந்து சென்று விட்டார். தனியாக, இருந்த கவிதா எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (35), தனியார் நிறுவன ஊழியருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் அடிக்கடி வீட்டுக்கு வந்து தங்கியிருந்து கவிதாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் கவிதா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதற்கிடையே, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கவிதா ராஜேஷுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் உல்லாசத்திற்கு அழைக்கும் போது மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே, ஆத்திரம் அடைந்த ராஜேஷ், கடந்த 15ம் தேதி இரவு கவிதா வீட்டிற்கு வந்து குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததால் அக்கம்பக்கத்தினர் ஆர்.கே. நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஸ்டீபன், ஆல்பர்ட் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில், ஆல்பர்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து, ஆர்.கே. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.