சென்னை: லோன் ஆப் மூலம் கடன் பெற்று தருவதாக ரூ10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை டெல்லியில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் ஹேண்டி லோன் ஆப் மூலம் லோனுக்கு விண்ணப்பித்துள்ளார். அதற்காக ஆப் நிறுவனத்தில் இருந்த பேசியவர்கள் லோனுக்காக ரூ10,09,250 கேட்டுள்ளனர். லோனுக்காக போனில் பேசியவர்களுக்கு பணம் அனுப்பிய பிறகு அவர்கள் போனை சுவிட்ச் ஆப் செய்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குணசேகரன் திருப்பூர் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் ஹேண்டி லோன் ஆப் மூலமாக லோன் பெற்று தருவதாக ரூ10 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார்.
புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். குணசேகரனிடம் லோனுக்காக பணம் பெற்று ஏமாற்றியவர்கள் டெல்லியில் இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக போலீஸ் குழு டெல்லிக்கு விரைந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட முகமது ஜூபைர் அன்சாரி மற்றும் ஹரிஷ் குமார் ஆகியோரை கைது நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் ஜஹாங்கீர்புரியில் அவர்கள் போலி கால்சென்டரை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலி அடையாள அட்டைகளை உருவாக்கி, தமிழகத்தில் லோன் ஆப் மூலமாக கடன் வழங்குவதாக பலரை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 16 சிம்கார்டு, 12 செல்போன்கள், 2 லேப்டாப், 2 பேங்க் செக் புக், ஒரு ஏடிஎம் கார்டு மற்றும் ரூ15 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து, வங்கி கணக்கில் இருந்து ரூ17,1000 முடக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் 2 பேரும் பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து முதன்மை குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்க முகமது ஜுபைர் அன்சாரிக்கு ரூபாய் 5 லட்சமும், இரண்டாவது குற்றவாளி ஹரிஷ் குமாருக்கு ரூபாய் 4 லட்சம் கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்களின் ஜாமீன் மனு பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். அதற்கு குற்றவாளிகள் ஒப்புக் கொண்டனர்.