மகரம் கிரகநிலை – ராசியில் சனி(வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு(வ) – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 25-ம் தேதி சுக்கிரன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: பாக்கிய ஸ்தானத்திற்கு யோகாதிபதி சுக்கிரன் மாற்றம் பெறுகிறார். தைரிய வீர்ய ஸ்தானத்தைப் பார்க்கிறார். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.
புத்திசாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.
உத்திராடம் – 2, 3, 4 பாதங்கள்: முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.
திருவோணம்: மனவலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
அவிட்டம் – 1, 2 பாதங்கள்: ஓய்வில்லாமல் உழைக்க நேரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும்.
பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமையன்று தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
***********
கும்பம் கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – விரைய ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 25-ம் தேதி சுக்கிரன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார். எதிர்பார்க்கும் பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியத்திலும் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். எல்லாவற்றிலும் இருந்த பயம் நீங்கும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் இருந்த இழுபறி அகலும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இருந்து வந்த மெத்தனமான போக்கு நீங்கி வேகம் பெறும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி, சந்தோஷம் உண்டாகலாம்.
மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பெண்களுக்கு வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு நற்பெயர் கிடைக்கும். லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.
அவிட்டம் – 3, 4 பாதங்கள்: எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.
சதயம்: எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.
பூரட்டாதி – 1, 2, 3 பாதங்கள்: மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சோதனைகள் வெற்றியாக மாறும்.
பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும்.
***********
மீனம் கிரகநிலை – ராசியில் குரு(வ) – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – சப்தம ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 25-ம் தேதி சுக்கிரன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: ராசியை சூரியனோடு சேர்ந்து சுக்கிரனும் பார்ப்பதால் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும்.
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
சுபநிகழ்ச்சிகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். கலைத்துறையினருக்கு மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி – 4ம் பாதம்: புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
உத்திரட்டாதி: புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ரேவதி: எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவந்தால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.22- 28 வரை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |