சென்னை: இதுநாள் வரையில் மோட்டோ ஜிபி பைக் ரேசிங்கை தொலைக்காட்சி ஊடாக பார்த்து வந்த இந்திய ரசிகர்கள் இனி நேரிலும் கண்டுகளிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மோட்டோ ஜிபி தனது ஓட்டத்தை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம்.
ப்ரீமியர் கிளாஸ் மோட்டார் சைக்கிளிங் ரேசிங் நிகழ்வாக மோட்டோ ஜிபி அறியப்படுகிறது. இதன் போட்டிகள் அனைத்தும் சர்வதேச மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பின் அனுமதி பெற்ற ரோடு சர்கியூட்களில் தான் நடக்கும். மோட்டோ ஜிபி பந்தயங்களுக்கான விதிகள் மற்றும் விதிமுறைகளை வகுத்ததும் இந்த கூட்டமைப்பு தான் என தெரிகிறது. 20-ம் நூற்றாண்டின் மையத்தில் இருந்தே இந்த பணிகளை அந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
அர்ஜென்டினா, தாய்லாந்து, ஜப்பான், மலேசியா என உலகின் பல்வேறு இடங்களில் இந்த விளையாட்டு பரவலாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பைக் பந்தயம் இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் தனது ஓட்டத்தை தொடங்கும் என நம்பப்படுகிறது. அதற்காக நொய்டாவை சேர்ந்த ஃபேர்ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் இந்த பணிகளை முன்னெடுத்துள்ளது. இதற்காக டோர்னா குழுமத்துடன் இணைந்துள்ளது ஃபேர்ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே 7 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் சுற்றுலா சார்ந்த வர்த்தகம் மேம்படுவதோடு சுமார் 50 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள புத் சர்வதேச சர்கியூட்டில் மோட்டோ ஜிபி நடத்தப்படும் என தெரிகிறது.