புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் மேல்சாந்தியாக, இளம் வயது மருத்துவரும் யூடியூப் பிரபலமுமான கிரண் ஆனந்த் நியமிக்கப்பட்டுளளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள குருவாயூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் உள்ளது. இங்கு மேல்சாந்தியாக 34 வயதே நிரம்பிய கிரண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 1-ம் தேதி முதல், அடுத்த 6 மாதங்களுக்கு இவர் குருவாயூர் கோயில் மேல்சாந்தியாக இருப்பார்.
ஆயுர்வேத மருத்துவரான இவர், தன் மனைவி மானசியுடன் ஒரு யூடியூப் சேனலையும் நிர்வகித்து வருகிறார். மாஸ்கோவில் வசித்து வந்த இவர், அங்கு கடந்த ஆறு ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவராக இருந்து வந்தார்.
முன்னதாக, கிரண் ஆனந்தின் தந்தை, கோயிலின் பூஜை, சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொண்டு வந்தார். வயோதிகம் தொடர்பான நோய்களால் அவர் கோயில் பணிகளை செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டபோது, கிரண் இங்கு வந்து அப்பணிகளை செய்து கற்றுக் கொண்டார்.