பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடி மட்டுமே விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளார். விவசாயிகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வலியைப் போக்க பா.ஜ.க உழைத்திருக்கிறது” எனக் குஜராத்தில் கூறியிருந்தார். இதே வேளையில், `பாஜக ஆட்சியில், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி உயிரிழக்கிறார்’ எனக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினாட் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
மோடி பிறந்த நாளன்று உயிரிழந்த புனே விவசாயியைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுப்ரியா, “தஷ்ரத் லக்ஷ்மன் கேதாரி தன்னுடைய தற்கொலைக் குறிப்பில், கடனைத் திருப்பிச் செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்றும், அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், விவசாயிகளின் உரிமையாக விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை(MSP) கோரினார்.
இதுவொருபக்கமிருக்க, கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த 10,881 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இது கடந்த ஆண்டில் நிகழ்ந்த 1,64,033 தற்கொலை இறப்புகளில் 6.6 சதவீதம். இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் இறக்கின்றனர். இந்திய விவசாயிகளின் இந்த இக்கட்டான நிலைக்கு யார் காரணம்… இந்த அரசாங்கத்தின் கொள்கைகளும், விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் மீதான அரசாங்கத்தின் அக்கறையின்மையும் தான்” எனக் கூறினார்.