சென்னை: சென்னையில் ஆட்டோவில் பயணிப்பது போல கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை’ (Drive against Drugs) மூலம் கஞ்சா, போதை பொருட்கள் மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவிட்டதின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் பேரில்,
காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (20.09.2022) மதியம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியே ஆட்டோவில் வந்த பெண்மணியை மடக்கி விசாரணை செய்தனர். அப்போது அவர் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. விசாரணையில் மேற்படி பெண் ஆட்டோவில் சவாரியாக செல்வது போல கஞ்சா எடுத்து வந்ததும், ஆட்டோவை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கஞ்சா எடுத்து வந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில், ஆட்டோவை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபரை பிடித்தனர். கஞ்சா கடத்தி வந்த 1.ரஹ்மான், வ/24, த/பெ.கௌஸ் பாஷா, பக்கீர் ஷாகிப் தெரு, ஜாம்பஜார், திருவல்லிக்கேணி, 2.குல்னாஸ், பெ/வ.34, க/பெ.மஜித், ஜான் முகமது தெரு, எல்லிஸ் ரோடு, திருவல்லிக்கேணி, ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, மொத்தம் 4 கிலோ கஞ்சா, பணம் ரூ.9,130/- மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும், விசாரணைக்குப் பின்னர் நேற்று (20.09.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.