மியான்மரில் பள்ளி ஒன்றின்மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மத்திய சகாயிங் பிராந்தியத்தில் உள்ள லெட் யெட் கோன் கிராமத்தில் புத்த மடாலயத்தில் அமைந்திருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தைத் தாக்க முயன்றதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இறந்தவர்களின் சடலங்கள் ராணுவத்தால் சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி, மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள்மீது ராணுவத்தினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணுவத்தினர் பொதுமக்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், இதுவரை ராணுவத்தினர் குறைந்தபட்சம் 1,600 பொதுமக்களை கொன்றதாகவும், 12,000-க்கும் மேற்பட்டரை கைதுசெய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.