வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :”நடுநிலையான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து தரப்பினரின் கருதுக்களுக்கும் இடமளிக்க வேண்டும்,” என, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் பேசினார்.
ஏ.ஐ.பி.டி., எனப்படும், தகவல் ஒளிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய – பசிபிக் பயிற்சி மையத்தின் ஆண்டு கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தை துவக்கி வைத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அனுராக் சிங் தாக்குர் பேசியதாவது:
ஊடக நெறிமுறைகள் மற்றும் அதன் மதிப்புகளை பாதுகாத்து, உண்மையான, நம்பகத் தன்மை வாய்ந்த, துல்லியமான தகவல்களை வெளியிடுவதில் பிரதான ஊடகங்கள் பெரும் சவாலை எதிர்கொள்கின்றன. பிரதான ஊடகங்களுக்கான சவால், டிஜிட்டல் ஊடங்கள் அல்ல; பிரதான ஊடகங்களின் நடவடிக்கைகளே சவாலாக உள்ளன.
நடுநிலையான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பதிவு செய்வதுமே உண்மையான பத்திரிகை பணி.
‘டிவி’ சேனல்கள் விவாதங்களை நடத்தும்போது, கட்டுக்கதைகளை பரப்புவோரையும், காட்டுத் தனமாக கூச்சலிடுவோரையும் விருந்தினர்களாக அழைத்தால், அவற்றின் நம்பகத்தன்மை குறைந்து விடும்.
பொய்யான தகவல்களை பிரசாரம் செய்பவர்களுடன் போட்டி போட வேண்டிய கட்டாயம் இருந்தாலும், உண்மையான, நடுநிலையான செய்திகளை வெளியிடும் கடமை பத்திரிகையாளர்களுக்கு உள்ளது என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement