இந்நிலையைப் போக்கிட எண்ணிய சிவபெருமான் சாளுவ பக்ஷியாக (சரபம்) உருவெடுத்துத் தன் சிறகுகளால் அணைத்து நரசிம்மத்தைக் குளிர்வித்தார். சாந்தமடைந்த நரசிம்மம் தன்னிலை உணர்ந்தது. அசுர வதம் செய்தமையால் ஏற்பட்ட ஹத்தி தோஷத்தினைப் போக்கிக்கொள்ள நரசிம்மம் சிவ பூஜை செய்த தலம்தான் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ‘நரசிங்கன்பேட்டை’ ஆகும்.
நரசிம்மர் சிவனைப் பூஜித்த காரணத்தினால் இத்தலத்திற்கு ‘நரசிங்கபுரம்’ என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில், ‘நரசிங்கமங்கலம்’ என்று வழங்கப்பட்ட இவ்வூர் தற்போது நரசிங்கன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆலயமாகும்.
இப்பகுதியை ஆண்ட ‘நரசிம்மவர்மன்’ எனும் அரசன் இத்தீர்த்தத்தில் நீராடி, மூலவரை வழிபட்டுத் தன் மனைவியின் தீராத நோய் நீங்கப் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது.
ஸ்ரீ நரசிம்மமூர்த்தி மூலத்தானத்து இறைவனை வழிபடுவதற்காக நீராடிய தீர்த்தம் ஆலயத்தின் முன்புறத்தில் இன்றைய நாளில் சிறு குளமாகக் காட்சியளிக்கிறது. இதற்கு ‘நரசிம்மதீர்த்தம்’ என்று பெயர். இதே தீர்த்தத்தில் ஸ்ரீ பிரம்மாவும் நீராடியமையால், ‘பிரம்மதீர்த்தம்’ என்ற பெயராலும் குறிக்கப்படுகிறது என்பர்.
இத்தலம் அருகிலுள்ள திருவாவடுதுறையில் உறைந்திருந்த போகரின் மாணவரும், பெரும் சித்தருமாகிய ‘திருமாளிகைத் தேவரும்’, இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார் என்பது தல புராணம் சொல்லும் செய்தி.
திருவாவடுதுறையில் சிவயோகம் புரிந்து ‘திருமந்திரம்’ அருளிய ‘திருமூலதேவ நாயனார்’ தான் பரகாய பிரவேசம் செய்த உடலை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, இத்தலத்து இறையை வழிபட்டுப் பின்னர் சிவ சாயுஜ்யப் பதவி அடைந்தார் என இத்தலத்து வரலாறு உரைக்கிறது. யோக நிலையில் உள்ள அரிய நரசிம்மமூர்த்தமுடைய தனித்த ஆலயம் ஒன்றும் இச்சிவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.