சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா, மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வர்ண பேதங்களை விமர்சித்துப் பேசியிருந்தார். அதையடுத்து, “ஆ.ராசா இந்து மக்களின் மனதை புண்படுத்திவிட்டார்” என்று கூறிய பா.ஜ.க-வினரும், இந்து முன்னணியினரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், எம்.எல்.ஏ-வுமான வேல்முருகனும் ஆ.ராசாவின் கருத்தை ஆதரித்ததுடன் பா.ஜ.க, இந்து முன்னணியினரின் போக்குகளையும் கண்டித்திருக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று போராட்ட அறிவிப்பு வெளியிட்டிருந்தது பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம். அத்துடன் போராட்டம் நடைபெறும் இடத்தையும் குறிப்பிட்டிருந்தது. அதன்படி இன்று காலையில் ராஜா தியேட்டர் சந்திப்பில் கூடிய பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தினர், மனுதர்ம சாஸ்திரம் குறித்தும், அதில் வர்ண பேதங்கள் அடிப்படையில் மக்களை பிரித்து வைத்திருப்பது குறித்தும் விமர்சித்துப் பேசினர்.