பொதுவாக உணவகங்களில் உணவுகளைப் பரிமாறும் ஊழியர்களுக்கு, அவர்களின் சேவையைப் பாராட்ட டிப்ஸ் வழங்கப்படுவது வழக்கம். உலக நாடுகளில் அதிகபட்சமாக உணவகங்களில் சாப்பிடுவோர் தங்களின் பில்லில் 15-20 சதவிகிதம் வரை டிப்ஸ் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்ற சட்ட விதிகள் எதுவும் இல்லாததால், டிப்ஸ் வழங்குவது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது. சில வாடிக்கையாளர்கள் வழங்கும் டிப்ஸ் பெருமளவு பேசப்படுவதும் உண்டு.
அந்த வகையில், அமெரிக்காவில் ஒரு ஹோட்டல் ஊழியருக்கு வழங்கப்பட்ட டிப்ஸ் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா, பென்சில்வேனியாவின் ஸ்க்ரான்டனில் உணவகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் மரியானா லம்பேர்டுக்கு, வாடிக்கையாளர் ஒருவர் டிப்ஸ் வழங்கியிருக்கிறார். அந்தத் தொகையைப் பார்த்த அந்த ஊழியர், அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். காரணம், அவர் வழங்கிய டிப்ஸ் தொகை சுமார் 3,000 டாலர். இந்திய மதிப்பில் ரூ. 2.3 லட்சம். அதாவது, வெறும் 13 டாலருக்கு மட்டுமே உணவருந்திய அந்த நபர் 963 சதவிகிதத் தொகையை டிப்ஸாக வழங்கியிருக்கிறார்.
ஆனால், இவ்வளவு பணம் ஏன் கொடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர் சந்தேகித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக அந்த வாடிக்கையாளர்மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து அந்த உணவக உரிமையாளர், “டிப்ஸ் வழங்குவது யதார்த்தமானது. ஆனால், இது நிறைய முட்டாள்தனத்தையும் நாடகத்தையும் வெளிப்படுத்துகிறது. அதனால், துரதிஷ்டவசமாக, நாங்கள் இதை மாஜிஸ்ட்ரேட் அலுவலகம் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டியிருந்தது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த டிப்ஸ் விவகாரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் வேளையில், அந்த உணவாக ஊழியருக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்த நபர் ‘டிப்ஸ் ஃபார் ஜீசஸ்’ என்ற சமூக ஊடக இயக்கத்தின் ஒரு பகுதியாக இப்படிச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.