ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் அருகே வீடு வாடகை கேட்டு வந்தவரிடம் ‘உங்க ஜாதிக்கு வீடு வாடகைக்கு கொடுத்தால் குலதெய்வம் கோவித்துக்கொள்ளும்’ என பெண் ஒருவர் பேசிய வீடியோ வைரலானது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் வாடகைக்கு வீடு கேட்டு சென்றுள்ளார். அந்த நபரிடம் ‘நீங்கள் என்ன ஜாதி, மதம்’ என கேட்டுள்ளார். ‘தலித் ஜாதியினராக இருந்தால் எங்களால் வீடு தர முடியாது. அப்படி கொடுத்தால் எங்கள் குலதெய்வம் கோவித்துக் கொள்ளும்’ எனக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அப்பெண் பேசியதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ ஒட்டன்சத்திரம் பகுதியில் வைரலாக பரவியது. மேலும் சாதி குறித்து பேசிய பெண் மீது ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் மதுரை வீரன் என்பவர் புகார் கொடுத்தார். போலீசார் அப்பெண் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர். இதனால் தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.