கேரள மாநிலத்தின் பிரசித்திபெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். இந்தக் கோயிலில் பாரம்பர்யமிக்க விழாக்களும், தினசரி பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் குருவாயூர் கோயிலுக்கு ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகக் கோயிலின் கிழக்கு வாசல் அருகில் உள்ள தீப ஸ்தம்பம் அருகில் ஆன்லைனில் பணம் செலுத்தும் வகையில் QR கோடு வைக்கப்பட்டுள்ளது. இந்த கோடை ஸ்கேன் செய்து கூகுள் பே, போன் பே உள்ளிட்ட UPI ஆப்கள் மூலம் காணிக்கை செலுத்திக்கொள்ளலாம். குருவாயூர் கோயில் இணையதளத்திலும் இந்த QR கோடு இடம்பெற்றுள்ளது. அதை ஸ்கேன் செய்து பக்தர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் குருவாயூர் கோயிலுக்குச் சுலபமாகக் காணிக்கை செலுத்த முடியும்.
இது பற்றி குருவாயூர் தேவசம் தலைவர் வி.கே.விஜயன் கூறுகையில், “வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் இருக்கும் பக்தர்கள் தங்களுக்கு குருவாயூர் கோயிலில் காணிக்கை செலுத்த ஆன்லைன் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் எனக் கேட்டனர். மேலும், வெளிநாடுகளில் இருந்தபடி குருவாயூர் கோயிலில் நடக்கும் சீவேலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளைக் காண ஆன்லைன் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். முதற்கட்டமாக ஆன்லைனில் காணிக்கைச் செலுத்தும் வசதியைப் பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஏற்படுத்தி உள்ளோம்.
ஒவ்வொரு மாதமும் உண்டியலில் உள்ள காணிக்கைப் பணம் எண்ணும்போது, ஆன்லைன் மூலம் வரும் காணிக்கையையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். அதேபோல, ஆன்லைன் வழியாக நேரலையில் சீவேலி உள்ளிட்ட கோயில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்” என்றார்.