சென்னை: மன்னார்குடி ஸ்ரீ அண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபாவின் 75-வது வார்ஷிக த்ரிமதஸ்த வித்வத் சதஸ் ஜூலை 29, 30, 31-ம் தேதிகளில் மன்னார்குடியில் நடைபெற உள்ளது.
இந்த வித்வத் சதஸ் உ.வே.வித்வான் வேளுக்குடி வரதாச்சார் ஸ்வாமியின் சதமான (100-வதுஆண்டு) உத்ஸவமாக நடத்தப்படுகிறது.
மன்னார்குடி உ.வே.ஏ.ஸ்ரீ நிவாஸய்யங்கார் சுவாமியால் 1944-ம்ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீ அண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத்சபாவின் 75-வது வார்ஷிக த்ரிமதஸ்த வித்வத் சதஸ், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி சந்நிதி தெருவில் (ஸ்ரீநிவாச நிலையம்) வரும் 29-ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு (ஆடி 13 முதல் 15-ம் தேதி வரை) நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க வித்வான்கள், யஜுர், சாமவேத, ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம, திவ்யப்பிரபந்த வித்யார்த்திகள் (க்ரமாந்தம் அத்யயனம் செய்தவர்கள் மட்டும்) அழைக்கப்படுகிறார்கள். நிறைய எண்ணிக்கையில் வித்யார்த்திகள் வந்து தேர்வுகளில் பங்கேற்க வேண்டும். இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வித்யார்த்திகள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் அளிக்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெற வாய்ப்புள்ளது.
தினமும் காலை 10.00 முதல் 12.00 மணி வரையிலும், மாலை 3.00 முதல் 4.30 வரையிலும் மதத்ரய வேதாந்தங்களில் வாக்யார்த்தங்களும், ஸ்ரீகிருஷ்ண யஜூர் வேத, சாம வேதம், திவ்யப்பிரபந்தம், ஸ்ரீ பாஞ்சராத்ர சாஸ்திரங்களில் தேர்வுகளும், மாலை 4.30 மணி முதல் பிரபல வித்வான்களின் உபன்யாசங்களும் நடைபெறும்.
ஜூலை 29-ம் தேதி ஸ்ரீ செங்கமலதாயார் திருஆடிப்பூர உத்ஸவத்தை (யானை வாகனம்) முன்னிட்டு ‘யானை மேல் அழகர்’ என்ற தலைப்பில் உ.வே. வித்வான் ஆசுகவி ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரம ஆஸ்தான வித்வான், வில்லூர் முனைவர் வி.எஸ்.கருணாகராச்சாரியார் மாலை 4.15 மணி முதல் உபன்யாசம் நிகழ்த்த உள்ளார். அவரைத் தொடர்ந்து வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி ‘காரணமே கார்யம்’ என்ற தலைப்பில் உபன்யாசம் நிகழ்த்த உள்ளார்.
ஜூலை 30-ம் தேதி பல்லக்கு நிகழ்வை முன்னிட்டு, ‘ஸ்ருஷ்டி ப்ரயோஜனம் லீலையா முக்தியா’ என்ற தலைப்பில் மாலை 4.15 மணிக்கு உ.வே.வித்வான் வேளுக்குடி கி.ரங்கநாதாச்சாரியார் உபன்யாசம் நிகழ்த்த உள்ளார். அவரைத் தொடர்ந்து ‘ஸ்ரீ பாஷ்யம் முதல் அத்யாயம் – முதல் பாதம்’ என்ற தலைப்பில் உ.வே.வித்வான் திருபுல்லாணி சுந்தரராஜ அய்யங்கார் ஸ்வாமி உபன்யாசம் நிகழ்த்த உள்ளார்.
ஜூலை 31-ம் தேதி குதிரை வாகன உத்ஸவத்தை முன்னிட்டு மாலை 4.15 மணிக்கு ‘கோபாலபாலலீலை’ என்ற தலைப்பில் மத்வஸ்ரீ வித்வான் யதுநந்தநாச்சார் ஸ்வாமி உபன்யாசம் நிகழ்த்த உள்ளார். அவரைத் தொடர்ந்து ‘வேதமும் வாழ்க்கை முறையும்’ என்ற தலைப்பில் மஹாமஹாபாத்யாய, வேதபாஷ்யரத்னம் பாரதராஷ்டிரபதி ஸம்மாநித வித்வான் முல்லைவாசல் பிரம்மஸ்ரீ முனைவர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உபன்யாசம் நிகழ்த்த உள்ளார். அன்று மாலை 6 மணி அளவில் ஸம்பாவனை சதஸ் பஞ்ச சாந்தி – வந்தனோபசாரத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களைப் பெற 9840099833 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.