விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 3000 ரூபாயிலிருந்து இருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முன்னதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் அதேபோல் தற்போது விளையாட்டு வீரர்களுக்கான வழங்கப்படும் ஓய்வூதியத்தை 3000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதியத் தொகையைப் பெற www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஓய்வூதியத்தைப் பெற சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இதில் முதல் மூன்று இடங்களுக்குள் பிடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மூத்தோர் போட்டிகள் மற்றும் அழைப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியாது.